Asianet News TamilAsianet News Tamil

கோவையில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த மின்சார வாகனங்களின் அணிவகுப்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற மின்சார வாகனங்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகில், உலக மின்சார வாகன தினத்தை (World Electric Vehicle Day) முன்னிட்டு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகன பேரணி இன்று நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மின்சார வாகனங்களின் பேரணியை துவக்கி வைத்தனர்.

இப்பேரணியில் மின்சார வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டு அவர்களது மின்சார வாகன தயாரிப்புகளை ஊர்வலமாக ஓட்டிச் சென்றனர். முன்னதாக, பல்வேறு வடிவிலான மின்சார வாகனங்கள் குறித்த தகவல்களை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் தயாரிப்பாளர்கள் விளக்கினர்.

இப்பேரணியில் கனரக டிரக் வாகனம் உட்பட 30-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் ஊர்வலமாக சென்று மின்சார வாகனத்தின் முக்கியத்துவம் மற்றும் பலன்கள் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தினர்.

Video Top Stories