Bomb threat to Chepauk stadium | சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல் இடையே போட்டி நடைபெற்று வந்தது. இரவு 8.30 மணியளவில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் கடும் சண்டை நடந்த நிலையில் ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சூழலில் இன்று (மே 9) சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மைதான அலுவலகத்திற்கு இதுதொடர்பாக மின்னஞ்சல் வந்துள்ளது.ஐபிஎல் போட்டி நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என்றும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த இ மெயிலை தொடர்ந்து மோப்ப நாய் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சேப்பாக்கம் மைதானத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.