Asianet News TamilAsianet News Tamil

கோவையில் அமைச்சர் முத்து சாமியை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படையினர்; பொங்கி எழுந்த தொண்டர்கள்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதியை வழியனுப்புவதற்காக வந்திருந்த அமைச்சர் முத்துசாமியை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை முடித்து விட்டு மும்பை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது கோவை விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்தால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் செல்லும் பொழுது அவரை மட்டும் உள்ளே அனுமதித்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உடன் வந்த அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகளை  அனுமதிக்கவில்லை. 

இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த திமுக தொண்டர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அமைச்சர் யார் என்று கூடத் தெரியாமல் பாதுகாப்பு பணிக்கு எப்படி வருகிறார்கள்? எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விமான நிலையத்தில்  பரபரப்பான சூழல் நிலவியது. 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி விமான நிலையத்திற்குள் சென்று உதயநிதி ஸ்டாலினை வழி அனுப்பிவைத்து திரும்பினார். பின்னர் சம்பவம் குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, பாதுகாப்பு படையினர் சரியாக கவனிக்காமல் இருந்து விட்டனர். அதே சமயம் பாதுகாப்பு என்பது முக்கியம் என்பதால் அதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

Video Top Stories