Asianet News TamilAsianet News Tamil

கோவையில் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் விபத்துக்குள்ளாகும் தனியார் பேருந்து; கல்லூரி மாணவி படுகாயம்

கோவை கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கல்லூரி மாணவியின் மீது மோதி விபத்து ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த செம்மாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வையாபுரி மற்றும் வசந்தி தம்பதியினர். இவர்களது மூன்றாவது மகள் தேவதர்ஷினி. சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். 

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சோமனூரில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து வளைவில் அதிவேகமாக திரும்பியபோது, மாணவி தேவதர்ஷினி மீது மோதியதில் அவர் சாலையோரமிருந்த புதரில் தூக்கி வீசப்பட்டார். 

இதில் காயமடைந்த தேவதர்ஷினியை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள கருமத்தம்பட்டி போலீசார், பேருந்தை பறிமுதல் செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர். 

இந்த நிலையில் அதிவேகமாக வரும் தனியார் பேருந்து மாணவி தேவதர்ஷினியின் மீது மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் இந்த தனியார் பேருந்து இதே இடத்தில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories