
உலகின் 7 அதிசயத்தை கோழி முட்டையில் கொண்டு வந்த அரசுப்பள்ளி மாணவி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முட்டையில் உலக அதிசயங்களை ஓவியமாக வரைந்து கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த பாண்டியராஜ், உமா மகேஷ்வரி என்ற பட்டாசு தொழிலாளர் தம்பதியின் மகள் மாலதி (வயது 16). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். சமீப நாட்களாக ஓவியத்தில் அதிக ஆர்வம் கொண்ட மாணவி பல்வேறு ஓவிய போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்றுள்ளார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

இதன் அடுத்தகட்ட முயற்சியாக கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில் உலக அதிசயங்களான தாஜ்மஹால், சீனப் பெருஞ்சுவர், சிச்சென் இட்சா, பெட்ரா, மச்சு பிச்சு, மீட்பாரான கிறிஸ்து சிலை, கோலோசியம் ஆகிய 7 அதிசயங்களை முட்டையில் 48 நிமிடங்களில் தத்ரூபமாக ஓவியம் வரைந்து கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். ஓவிய ஆசியர் கூட இல்லாத அரசு பள்ளியில் பயிலும் மாணவி மாலதியின் தனி திறனை பலரும் பாராட்டி வருகின்றனர்.