Asianet News TamilAsianet News Tamil

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை; மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புது தகவல்!!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாதரை தரிசனம் செய்த பின்னர் சக்கரத்தாழ்வார், தாயார் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், ''இரண்டு நாட்களாக கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாஜக, இந்து முண்ணனியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாக்குதல் நடத்தியவர்களுக்கு தமிழக அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். என்ஐஏவுக்கு கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தான் சோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர். இதை திமுக திரித்து கூறுவதோடு ஓட்டு வங்கி அரசியல் செய்கிறது. இந்த சோதனை குறித்து பேசக்கூடிய அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமாவது அறிவு வேண்டும்'' என்றார். 

எய்ம்ஸ் மருத்துவமனை 95 % கட்டுமான பணிகள் முடிந்துவிட்டதாக நேற்று ஜே.பி.நட்டா தெரிவித்திருந்தாரே என்ற கேள்விக்கு, ''இந்த ஒப்பந்தமானது கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.1664 கோடி நிதியில் எய்ம்ஸ் கட்டுவதற்காக திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான நிதிக்கு இந்த மாதம் 22 ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் வரும் 2026, அக்டோபர் மாதம் நிறைவடையும்'' என்றார்.

''ஆ.ராசாவின் கருத்திற்கு பாஜகவின் பட்டியலின‌ அணி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேற யாராக இருந்தாலும் பதில் சொல்லலாம். இது திமுகவின் வெற்று விளம்பரத்திற்கான பேச்சாக உள்ளது‌. வேல் யாத்திரையை பாஜக நடத்திய போது, தற்போதைய முதல்வர் வேலை கையில் பிடித்து ஒரு அரசியலை நிகழ்த்தினார். 

ராகுல் காந்தியின் நடை பயணம் ஆரம்பத்திலேயே தோல்வியை சந்தித்தது உள்ளது. அவர் கேரளாவிற்குள் நுழைந்து நடை பயணத்தில் இருக்கும் போதே, கோவா காங்கிரஸ் கட்சியினர் கட்சியை விட்டு வெளியேறினர். அவர் காஷ்மீர் சென்று அடைவதற்குள் ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சியும் இந்தியாவிற்குள் இல்லாமல் போய்விடும். திருச்சி வானொலி நிலையம் இட்ட மாற்றம் செய்வதாகவும், வானொலி நிலையம் மூடப்பட உள்ளதாகவும் வதந்திகள் பரபரப்பட்டு வருகிறது. அது உண்மையல்ல‌.

ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவித்து பேசிய கோவை பாஜக மாவட்ட தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதுகண்டனத்திற்குரியது. சர்ச்சை ஏற்படுத்தியவரை விட்டு விட்டு, எதிர்த்து கேள்வி கேட்டவரை கைது செய்து இருக்கின்றனர்'' என்றார். 

Video Top Stories