Asianet News TamilAsianet News Tamil

திருச்சி திருவெறும்பூர் அருகே தாறுமாறாக வந்த கார் மோதியதில் 7 பேர் காயம்.

திருவெறும்பூர் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலையில் கார் ஒன்று தாறுமாறாக வந்து  சாலையில் சென்றவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த சந்திரசேகர் பிள்ளை மகள் அணு (வயது 37), பெல் டவுன் சிப்பை சேர்ந்த பெல் ஊழியர்கள் அருணாச்சலம் (42), சுரேஷ், மலைக்கோவில் பகுதியைச் சேர்ந்த சிவஞானம் மகன் பூபதி (22), காட்டூரை சேர்ந்த முஸ்தபா மகன் அப்துல் சலீம் (26), புதுக்கோட்டை இலுப்பூரை சேர்ந்த குமார் மனைவி கோமதி (36), உக்கடை அரியமங்கலத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் முகமது ரிஸ்வான் (28), ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரையும் அவ்வழியே வந்தவர்கள் மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அவர்கள் மீது மோதிய கார் தொடர்ந்து நிற்காமல் தாறுமாறாக சென்றது. இது பற்றி பொதுமக்கள் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தொடர்ந்து திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை அருகே சென்ற காரை பொதுமக்கள் உதவியுடன் போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை ரகுமான் நகரை சேர்ந்த ஜேம்ஸ் எடிசன் மகன் ஆரோக்கியலூர்து நாயகம் (23) என தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அதே நேரத்தில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசினார். போலீசாரை குழப்பம் அடைய செய்வதற்காக அவ்வாறு பேசுகிறாரா? அல்லது காரை திருடி தப்பிப்பதற்காக வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தினாரா? என போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video Top Stories