Asianet News TamilAsianet News Tamil

சோழவரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்து ரூ.70 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சோழவரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் இது தொடர்பாக ஒருவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த நல்லூர் பகுதியில் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையில் நள்ளிரவில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞரை மறித்து காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசவே அந்த இளைஞரிடம் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

அந்த இளைஞர் பம்மதுகுளம் பகுதியை சேர்ந்த அருண் என்பதும், ஆந்திராவிலிருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து ஒருவீட்டில் பதுக்கி வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பம்மதுகுளம் சென்ற காவல் துறையினர் அங்கு ஒரு வீட்டிலிருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அருணை கைது செய்த காவல்துறையினர் இந்த கடத்தலில் வேறு யாராவது சம்மந்தப்பட்டிருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.