Asianet News TamilAsianet News Tamil

நெடுஞ்சாலை ஓரமாக வாகன ஓட்டிகளுக்கு ஒய்யாரமாக போஸ் கொடுத்த புலி

கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு மணி நேரம் உலா வந்த புலியை வாகன ஓட்டிகள் அச்சத்துடனும், ஆச்சரியத்துடனும் பார்த்துச் சென்றனர்.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக கூடலூரில் இருந்து கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அவ்வபோது காட்டு யானைகள், காட்டெருமை போன்ற வன விலங்குகள் உலா வருவது வழக்கம். 

இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5.30 மணி அளவில் தமிழ்நாடு எல்லை பகுதியான கக்கநள்ளா சோதனை சாவடி அருகே சாலை ஓரத்திற்கு வந்த புலி ஒன்று நீண்ட நேரமாக சாலை ஓரத்தில் அமர்ந்து சாலையில் சென்ற வாகனங்களை பார்த்த படி எவ்வித அச்சமும் இன்றி ஒய்யாரமாக அமர்ந்திருந்தது. 

புலி சாலை ஓரத்தில் அமர்ந்திருப்பதை பார்த்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் இருந்தபடியே புகைப்படம் எடுக்க தொடங்கினர். எதையும் பொருட்படுத்தாத அந்த புலி சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் அமர்ந்தபடி யாரையும் அச்சுறுத்தாமல் காட்சி தந்தது. 

வாகனங்கள் அதிக அளவு கூடியதால் அந்த புலி எழுந்து மீண்டும் வனப்பகுதிக்குள்  சென்றது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு மணி நேரம் சாலை ஓரத்தில் போஸ் கொடுத்த புலியால் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Video Top Stories