Asianet News TamilAsianet News Tamil

சேலம் கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களின் நேர்த்திகடனை செய்து வழிபட்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 17 நாட்களாக மாரியம்மன் சுவாமி தினந்தோறும் பல்வேறு அவதாரங்களில் வீதி உலா வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாரியம்மன் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.

கவுண்டம்பட்டியில் உள்ள சரபங்கா ஆற்றில் அலகு குத்திக்கொண்டு கவுண்டம்பட்டி பகுதி முழுவதும் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு தட்டுடன் ஊர்வலம் வந்தனர். மாவிளக்கு தட்டில் உள்ள தேங்காய்களை எடுத்து ஊர்வலத்தின் போதே பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்.

நிறைவேறாத செயல்களை மனதில் நினைத்துக்கொண்டு தலையில் தேங்காய் உடைத்தால், வேண்டுதல் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

Video Top Stories