Asianet News TamilAsianet News Tamil

நான் பேசுவதற்கு பல விசயங்கள் உள்ளன; ஆனால் பேசக்கூடிய மனநிலையில் இல்லை - திருச்சி சிவா வேதனை

நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் வீடு அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் அவற்றை பார்வையிட்ட சிவா நான் பேசுவதற்கு பல விசயங்கள் உள்ளன, ஆனால் நான் பேசக்கூடிய மனநிலையில் இல்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

திருச்சியில் நேற்று அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், எம்.பி. திருச்சி சிவாவின் ஆதராவளார்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் விளைவாக திருச்சி சிவாவின் வீடு, கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை அமைச்சரின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக 4 பேர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி சிவா இன்று தனது சேதப்படுத்தப்பட்ட வீடு, கார் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் அழுத்தமான கட்சிக்காரன். தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதலானது மிகுந்த வேதனை அளிக்கிறது. மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.

என் வீட்டில் பணியில் இருந்த மூத்த குடிமக்கள் சிலர் மிகுந்த வேதனையில் உள்ளனர். அது எனக்கு வருத்தமளிக்கிறது. பொதுவெளியில் பேசுவதற்கு என்னிடம் நிறைய விசயங்கள் உள்ளன. ஆனால், தற்போது மனநிலை சரியில்லாத காரணத்தால் ஏதும் பேசாமல் செல்கிறேன். இது குறித்து நான் யாரிடமும் புகார் கூற விரும்பவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துவிட்டுச் சென்றார்.