Asianet News TamilAsianet News Tamil

புரட்டாசி சனிக்கிழமை தூத்துக்குடி நவதிருப்பதிக்கு அரசு ஆன்மீக சுற்றுலா சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு!!

புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.  
 

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் நவதிருப்பதி ஸ்தலங்கள் அமைந்துள்ளன. 108 திவ்ய தேச ஸ்தலங்களில் இடம்பெற்றுள்ள திருவைகுண்டம் நத்தம், திருப்புளியங்குடி இரட்டை திருப்பதி, பெருங்குளம் தென்திருப்பேரை, திருக்கோளூர் மற்றும் ஆழ்வார் திருநகரி ஆகிய ஸ்தலங்களுக்கு புரட்டாசி மாதங்களில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆன்மீக சுற்றுலா சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகிறது. செப்டம்பர் 24 மற்றும்  அக்டோபர் 1 8, 15 ஆகிய தேதிகளில் நவதிருப்பதி கோவில்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துக்காக  நபர் ஒன்றுக்கு ரூபாய் 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு முன்பதிவு நடைபெற்றது. 

மேலும் படிக்க:திருச்சியில் அக்டோபர் 9ம் தேதி வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை.. என்ன காரணம் தெரியுமா?

புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காலை  திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 3  பேருந்துகள் புறப்பட்டன. ஆன்மீக பயணம் செல்லும் பக்தா்களுக்கு அரசு போக்குவரத்துகழக மேலாண் இயக்குனர் மோகன் குடிநீர், இனிப்பு, காரம், பிஸ்கெட் போன்றவற்றை வழங்கினார். ஒவ்வொரு பேருந்திலும் ஒரு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் முன்னின்று வழிநடத்திச் செல்கின்றனர்.

பக்தர்களுக்கு ஒவ்வொரு கோவிலை பற்றிய தல வரலாறு மற்றும் அங்கு அருள் பாலிக்கும் பெருமாளின் பெருமைகளை விளக்குகின்றனர். காலை 7:00 மணிக்கு கிளம்பும் பேருந்துகள் மாலை 7 மணிக்கு மீண்டும் நெல்லை புதிய பேருந்து நிலையத்தை வந்து அடையும். இதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்துகழக  பொது மேலாளர் மற்றும் அதிகாரிகள் செய்துள்ளனர்.

மேலும் படிக்க:பட்டாக்கத்தியுடன் ரயிலில் பயணம் செய்தால் 10 ஆண்டு சிறை.. கல்லூரி மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை எச்சரிக்கை.!

மேலும் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி கோவில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், திருக்குறுங்குடி நம்பி கோவில் மற்றும் அத்தால நல்லூர் பெருமாள் கோவில் ஆகிய இடங்களுக்கும் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வெங்கடாஜலபதி திருக்கோவில் ஆகிய பகுதிக்கும் நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Video Top Stories