Asianet News TamilAsianet News Tamil

Vijay: 15 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை; தமிழக வெற்றி கழகத்தில் வெடித்த சர்ச்சை

விஜய் மக்கள் இயக்கத்தில் பாடுபட்டவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் இடமில்லை என வேதனையுடன் கூறும் குமாரபாளையம் நகர விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகி குற்றங்களை ஆரம்பத்திலேயே களைய வேண்டும் என கோரிக்கை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி தலைவராக பொறுப்பு வகிப்பவர் பிரேமலதா. இவர் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்க்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையில் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பலரும், பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் சூழ்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்த சிலர்கள் அதனை தடுத்து வந்தனர். 

இந்நிலையில் மாவட்டம் மற்றும் நகர நிர்வாகிகள் செய்யும் தவறுகளால் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். கடந்த 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்தவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் தொடங்கியதும் அவற்றில் பதவிகள் வழங்காமல், மாவட்டம் மற்றும் நகர நிர்வாகிகள் தங்கள் உறவினர்களுக்கும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குமே பரிந்துரை செய்து பதவிகளைப் பெற்றுத் தருகின்றனர். 

இதனால் உண்மையாக உழைத்தவர்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இது மற்ற கட்சிகளைப் போலவே தமிழக வெற்றிக் கழகத்திலும் நடந்து விடும் அவல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டு களைய வேண்டும் என தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Video Top Stories