
DMK News
கோவை, டாடாபாத் பகுதியில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் கோவை மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 1 ம் தேதி முதல் தொடர்ந்து ரத்ததான முகாம், மருத்துவ முகாம், நலத் திட்டங்கள், பட்டிமன்றம், தெருமுனை பிரச்சாரம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. மேலும் வரக் கூடிய ஒரு வார காலத்திற்கு இந்தி மொழி எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இல்லங்களின் முன்பு கோலமிடுதல், துண்டு பிரசுர விநியோகங்கள் போன்ற முன்னெடுப்புகளும் நடத்தப்பட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டது.