Asianet News TamilAsianet News Tamil

ஆதிச்சநல்லூர் அகழாய்வு - முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள் கண்டுபிடிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் 2 முதுமக்கள் தாழியில் மனிதனின் அனைத்து எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 8 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் அகழாய்வு பணியில் 30 சென்டி மீட்டர் ஆழத்தில் ஒரு தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் ஆதிச்சநல்லூரில் ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த சுண்ணாம்பால் உருவாக்கப்பட்ட தரைதளம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. தற்போது அதன் அருகே சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுவரில் இரண்டு பகுதிகளில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சங்க கால வாழ்விடப்பகுதி மற்றும் சங்க கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட 3200 ஆண்டுகள் பழமையான இரண்டு முதுமக்கள் தாழியில் இருந்து மனிதனின் அனைத்து எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு எலும்புகள் மட்டுமே இருந்துள்ள நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழியில் தலை, தாடை, பல், கை, கால், முதுகு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பற்கள் டிஎன்ஏ பகுப்பாய்விற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Video Top Stories