Asianet News TamilAsianet News Tamil

சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களை திருடிய நபரை கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்

நாட்றம்பள்ளி அருகே சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களை திருடிய நபரை கட்டி வைத்து  தர்ம அடி கொடுத்த கடையின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள். 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கருணாநிதி தெரு பகுதியில் பெரியசாமி மகன் சாமுண்டி என்பவர் கார்த்திகா சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த கலையரசன் (வயது 28) என்பவர் தினந்தோறும் இந்த கடைக்கு வருவது வழக்கம். 

இந்த நிலையில் இன்று வழக்கம்போல் கடைக்கு வந்து சோப்பு, பேஸ்ட், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை திருடி தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்துள்ளார். இதனை சிசிடிவி காட்சியின் வாயிலாக  உரிமையாளர் சாமுண்டி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வெளியே வரும் போது கையும், களவுமாக உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த பொருட்களை கடையின் உரிமையாளர்கள் கைப்பற்றினர். 

இதனைத் தொடர்ந்து கலையரசனின் கைகளை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் அந்த வழியாக வந்து சென்ற பொதுமக்களும் தர்ம அடி கொடுத்தனர். இதன் காரணமாக வலியால் துடித்த கலையரசன் அனைவரது கால்களிலும் விழுந்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி கதறி அழுந்தார்.

பின்னர் சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலிசார் பொதுமக்களிடம் இருந்து கலையரசனை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video Top Stories