Asianet News TamilAsianet News Tamil

புதுமனை புகுவிழாவிற்காக சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள்; அடுத்தடுத்து மோதிய விபத்தில் 6 பேர் காயம்

நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்றிருந்த கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, லட்சுமிபுரம் அருகே பாபு (வயது 65) என்பவரின் வீட்டில் இன்று காலை புதுமனை புகுவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது உறவினர்கள் வந்த கார் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு விழாவிற்கு சென்றிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி அதி வேகமாக சென்ற கார் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது லேசாக உரசியதில் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீதும், அருகில் இருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீதும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் காரில் இருந்த மூன்று பேர் மற்றும் மோதிய காரில் இருந்த மூன்று பேர் என மொத்தம் ஆறு பேர் லேசான காயங்களுடன் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லட்சுமிபுரம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா காட்சிகளை மிஞ்சுகிறது அந்த காட்சிகள். இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video Top Stories