Asianet News TamilAsianet News Tamil

போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியவில்லை; சேதமடைந்த சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர் காவிலிபாளையம் அருள்ஜோதி நகர் பகுதியில் மோசமான சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டு மாநகராட்சி மேயரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லூரி சாலையில் உள்ள காவிலிப்பாளையம் அருள்ஜோதி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி சாலையில் இருந்து காவிலிப்பாளையம் பகுதிக்கு செல்வதற்காக ரயில்வே தண்டவாளத்திற்கு அடியே உள்ள பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அப்பாதையில் எப்பொழுதும் தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருப்பதன் காரணமாக அவ்வழியே போக்குவரத்து பயன்படுத்துவதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இது தொடர்பாக பலமுறை மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி பொதுமக்கள் சேறும், சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து சாலையை சீரமைத்து தருவதோடு தங்கள் பகுதிக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் மனு அளித்தனர்.

Video Top Stories