Asianet News TamilAsianet News Tamil

ஆமை வேகத்தில் நடைபெறும் நெடுஞ்சாலை பணிகள்; மக்கள் ஜனநாயக கட்சியினர் விசித்திர போராட்டம்

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறி ஆமையின் புகைப்படத்துடன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான 44, 45வது வார்டு பகுதியில் முக்கிய சாலையான தாராபுரம் சாலையில் இருந்து காங்கேயம் சாலை செல்லும் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு வருட காலமாக ஆமை வேகத்தில் நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் துரிதமாக இந்த சாலை பணிகளை செய்து முடித்திட நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஆமை வேகத்தில் நடைபெறும் பணியை அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் ஆமை புகைப்படத்துடன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். 

மேலும் திருப்பூர் மாநகரப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்று மெத்தனமாக சாலை பணிகள் நடந்து வருவதாகவும், இதனால் சாலை விபத்துகள் தினம் தோறும் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகளிடம் மக்கள் ஜனநாயக கட்சியினர் முறையிட்டனர்.

Video Top Stories