Asianet News TamilAsianet News Tamil

Watch : தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்ட சோதனை ஓட்டத்திற்கு எதிர்ப்பு! - விவசாயிகள் போராட்டம்!

நெல்லையில், தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்ட சோதனை ஓட்டத்துக்காக ஒரு சொட்டு தண்ணீரை கூட எடுக்க விடமாட்டோம் என்று விவசாயிகள் ஆவேசமடைந்தனர். சோதனை ஓட்டத்தை நிறுத்த கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் 13 ஆயிரத்து 758 மில்லியன் கன அடி நீர் உபரியாக கலக்கிறது. இந்த நீரை கண்ணடியன் அணைக்கட்டில் இருந்து 2765 மில்லியன் கனஅடி நீரை கருமேனியாறு, நம்பியாறு மற்றும் தாமிரபரணி நதிகளுடன் இணைப்பதற்கு, வெள்ள நீர் கால்வாய் ஏற்படுத்தி தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியார் நதிநீர் இணைப்பு திட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு சுமார் 369 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் தொடங்கப்பட்டது.

பின்னர் பல்வேறு காரணங்களால் திட்டப் பணிகள் முடக்கப்பட்டது. மீண்டும், கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 872 கோடி மதிப்பீட்டில் திட்டம் மறு  மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது, பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 32 கிராமங்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 18 கிராமங்களும் பயன் பெறும்.

நான்கு அலகுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அனைத்துப் பணிகளும் வரும்  2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  நெல்லை கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் வெள்ளநீர் கால்வாய் பணிக்காக பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நடப்பாண்டில், நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மழை பெய்து வெள்ளநீர் ஏற்பட்டால் 1300 கன அடி தண்ணீர் தற்காலிகமாக சோதனை ஓட்டமாக இந்த வெள்ள நீர் கால்வாயில் செல்வதற்கான பணிகள் முடுக்கி  விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாபநாசம் அணையில் இருந்து 1300 கன அடி தண்ணீர் சோதனை ஓட்டமாக வெள்ள நீர் கால்வாய் பணிகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளதாகவும், சபாநாயகர் அப்பாவு தான் இந்தப் பணிகளை முன்னெடுப்பதாகவும் கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தமிழக சபாநாயகரும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, பருவ மழையினால் உருவாகும் உபரி நீர் இந்த வெள்ள நீர் கால்வாயில் சோதனை ஓட்டமாக செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதற்கு கன்னடியான் கால்வாய் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், விவசாயிகள் மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குறிப்பிட்ட சிலரை மட்டுமே ஆட்சியரை சந்திக்க அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து கடும் வாக்குவாதத்துக்குப் பிறகு சுமார் பத்து விவசாயிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இது குறித்து கன்னடியான் கால்வாய் பாசன விவசாய சங்க செயலாளர் கண்ணப்ப நயினார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''பாபநாசம் அணைக்கட்டில் தற்போது 82 அடி தண்ணீர் தான் இருக்கிறது. இந்த நிலையில் 75 கிலோமீட்டர் தூரத்திற்கு தண்ணீரை சோதனைக்காக எடுக்கும்போது அணைக்கட்டில் சுத்தமாக தண்ணீர் இஇல்லாத நிலை ஏற்படும். மேலும் பாசன  சாகுபடிக்காக காத்திருக்கும் கன்னடியான், கோடை மேலழகியான், நதி யுண்ணி மற்றும் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள மற்ற பிற கால்வாய் பாசன பகுதி விவசாயிகளும் கடும் பாதிப்பு ஏற்படும். எனவே சோதனை ஓட்டத்திற்காக ஒரு சொட்டு தண்ணீர் கூட எடுக்க விடமாட்டோம்'' என்று ஆவேசமாக  தெரிவித்தனர்.

Video Top Stories