Asianet News TamilAsianet News Tamil

வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட காரை கடித்து குதறிய தெருநாய்கள்; வீடியோ வெளியாகி பரபரப்பு

தேனியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை தெருநாய்கள் ஒன்றிணைந்து கடித்துக் குதறிய காட்டி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேனி மாவட்டம் தேனி நகர் புதிய பேருந்து நிலையம் அருகே கேஆர்ஆர் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய பிரிவு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்து வீடு திரும்பிய அவர் தனது வீட்டு வாசலின் முன்பு தனது காரை நிறுத்தி வைத்துள்ளார். பின் காலை வந்து பார்த்தபோது தனது காரின் முன் பக்கம் பலமாக சேதம் அடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்த்த போது அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் தனது காரை வெறி பிடித்தது போல் கடித்து குதறிய காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காரின் முன்பக்க பம்பர்களை கடித்துக் குதறிய நாய்கள் காரின் மேல் ஏறி நின்றும் சேதப்படுத்தி அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று சுற்றி திரிந்தது.

பின்னர் காரினை ஷோரூம்விற்கு எடுத்துச் சென்று பார்த்த போது சுமார் 50 ஆயிரம் வரை செலவு ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். இப்பகுதியில் நாய்களின் தொல்லை தொடர்ந்து இருந்து வருவதாகவும், இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறினார்.

Video Top Stories