Asianet News TamilAsianet News Tamil

சுத்தம் சோறு மட்டுமல்ல பிரியாணியும் போடும்; தஞ்சையில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து அளித்த டிரஸ்ட்

தஞ்சையில் தனியார் அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலையில்லா அசைவ விருந்து பரிமாறும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

தஞ்சை மாநகராட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நகரின் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பேணி நகரை அழகாக்கும் பணியில் உயிரை துச்சமென எண்ணி ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவது, கிருமி நாசினி தெளிப்பது என தொடர்ந்து தூய்மை பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் “சுத்தம் பிரியாணியும் போடும்” என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா தஞ்சை மாநகராட்சி 13ம் கோட்ட தூய்மை பணியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி 13ம் கோட்டத்தை சேர்ந்த ( வார்டு 50 / 51 பகுதியில் பணிபுரியும் ) தூய்மை பணியாளர்கள், ஊர்தி ஓட்டுனர்கள் உள்ளிட்ட 85 பணியாளர்களுக்கு மட்டன், சிக்கன், முட்டை, ஐஸ்க்ரீமுடன் கூடிய அசைவ மதிய விருந்து பரிமாறப்பட்டது.

இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டும் வகையில் சுத்தம் பிரியாணியும் போடும் என்ற இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தன்னலம் பாராமல் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தஞ்சை நகர பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் முழு அசைவ விருந்து பரிமாறுவதே இந்த திட்டத்தின் நோக்கம். 

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தஞ்சை மாநகராட்சியில் தான் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் விலையில்லா முழு அசைவ விருந்து பரிமாறும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்தளிக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

Video Top Stories