Asianet News TamilAsianet News Tamil

நில அளவையர்களுக்கு பாதுகாப்பு இல்லை; தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 4 மாவட்ட அளவையர்கள்

பணியில் இருந்த பெண் நில அளவையரை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நான்கு மாவட்டங்களை சேர்ந்த நில அளவையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், பெரியகோட்டை கிராமத்தில் நில அளவையராக பணியாற்றி வரும் பவ்யா என்பவர் கடந்த 2ம் தேதி பெரிய கோட்டை கிராமத்தில் எல்லை அளவை மேற்கொண்டுள்ளார். அப்பொழுது முருகானந்தம் என்பவர் நில அளவையர் பவ்யா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மாரியம்மாள் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பவ்யா பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பவ்யா மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முருகானந்தம் என்பவரை காவல் துறையினர் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண் நில அளவையர் பவ்யாவை தாக்கிய முருகானந்தத்தை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வரும் நில அளவையர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Video Top Stories