சிறுமிகளை தெய்வமாக்கி கடல் அன்னைக்கு பொங்கல் வைத்து வழிபட்ட மீனவ மக்கள்

ராமநாதபுரத்தில் கிராம மக்கள் சார்பாக 7 சிறுமிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடல் அன்னைக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்வு நடைபெற்றது.

Share this Video

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே உள்ள மோர்பண்ணை கிராமத்தில் மீனவ மக்கள் அதிகமாக குடியிருந்து வருகின்றனர். அவர்கள் கடல் அன்னைக்கு ஊரின் நடுவே அமைந்திருக்கும் ஸ்ரீ ரணபத்ரகாளியம்மன் ஆலயத்தின் முன்பாக சப்த கன்னிகள் (ஊரில் உள்ள 7 பெண் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு) மூலம் பொங்கல் வைத்தனர்.

முன்னதாக கிராமம் சார்பில் தேர்ந்ததெடுக்கும் 7 கன்னி பெண்களும், அவர்களது குடும்பத்தினரும் 30 நாட்கள் விரதமிருந்து கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு ஊர் காவல் தெய்வமான முனியய்யா கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று வழிபட்டு அங்கிருந்து ஸ்ரீ ரணபத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்து 7 பானைகளில் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபடுகின்றன். 

அதனைத் தொடர்ந்து கோவிலில் முன் வைத்திருந்த கும்பங்களை சப்தகன்னிகள் எடுத்து தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலமாக வந்து கடற்கரையை வந்தடைந்தனர். பின் சிறிய படகு ஒன்றை ஊர் தலைவர் சுமந்துவர அதன்பின்பு சப்தகன்னிகள் கும்ப பொங்கலை சுமந்து கடற்கரை வந்தடைந்து கடற்கரையில் சில சம்பிரதாயங்கள் செய்து கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அனைத்தையும் கடல் அன்னைக்கு சமர்ப்பித்துவிட்டு திரும்பி வந்தனர்.

இந்த நடைமுறை 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பின்னர் கிராம மக்கள் சார்பாக கரகாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Related Video