VIDEO : ஆலங்குடி அரசு மருத்துவமனை ICU வார்டில் தீ விபத்து! 2 நோயாளிகள் பத்திரமாக மீட்பு!

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உள்ள ஐ சி யூ வார்டில் உயர் மின்னழுத்தம் காரணமாக திடீரென தீ பிடித்தது. அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சைக்காக இருந்த இரண்டு நோயாளிகளை உடனடியாக அப்புறப்படுத்தி தீயை அணைத்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
 

Dinesh TG  | Published: Jun 13, 2023, 12:01 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் முயற்சியால் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் ஐ சி யூ வார்டு அமைக்கப்பட்டது. இதனால் மாரடைப்பு போன்ற அவசர நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக இருந்தது. இந்நிலையில் ஐ சி யூ வார்டில் மின்சாரம் சீராக இல்லை என்றும் அதனை சீரமைத்து தருமாறும் மருத்துவமனை நிர்வாகம் பலமுறை மின்சார வாரியத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் நேற்று இரவு திடீரென ஐ சி யூ வார்டில் உயர் மின்னழுத்தம் காரணமாக தீப்பிடித்தது.



இதனால் அதிர்ச்சடைந்த மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சைக்காக அங்கு இருந்த இரண்டு நோயாளிகளை உடனடியாக அப்புறப்படுத்தினர். மேலும் தீவிரமாக செயல்பட்டு உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மானிட்டர் போன்ற சில கருவிகள் தீயில் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஐசியூ வார்டு அமைந்துள்ள பகுதியில் டயாலிசிஸ் மெஷின் அமைக்க முயற்சிகள் நடந்து வரும் நிலையில் உயர் மின்னழுத்தம் காரணமாக மருத்துவமனையில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories