Asianet News TamilAsianet News Tamil

காரில் இருந்து எட்டி பார்த்த நல்ல பாம்பு; காரை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்த விவசாயி

நாமக்கல்லில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென பாம்பு எட்டிப் பார்த்ததால் பதறிப்போன விவசாயி காரை சாலையில் நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார்.

நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த மயில் சாமி மகன் ராஜேந்திரன்(வயது 45). விவசாயியான இவருக்கு சொந்தமான மாருதி சுசுகி ஷிப்ட் சொகுசு கார் உள்ளது. ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர் மணிகண்டன் ஆகிய இருவரும் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியில்  உள்ள கார் பழுதுபார்க்கும் இடத்திற்கு  தனது காரை பழுது பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். 

காரை மணிகண்டன் ஓட்டி சென்றுள்ளார். அப்போது புதுப்பேட்டை பகுதியில் கார் சென்றபோது கார் உள்ளே முன் பகுதியில் நான்கடி நீளமுள்ள பாம்பு வெளியே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், மற்றும் ராஜேந்திரன் காரை சாலையின் ஓரத்தில் அவசரமாக நிறுத்திவிட்டு இறங்கி தப்பினர். இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காரை பல பாகங்களாக பிரித்து, தண்ணீரை பீச் அடித்தும் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. போக்கு காட்டிய பாம்பு யாரிடமும் சிக்காமல் பதுங்கியது. பாம்பு கிடைக்காத ஏமாற்றத்தில் தீயணைப்பு துறையினரும் ஏமாற்றத்துடன் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Video Top Stories