Asianet News TamilAsianet News Tamil

Video : கிருஷ்ணகிரி இளைஞர் படுகொலை விவகாரம்! - இருவர் சேலம் நீதிமன்றத்தில் சரண்!

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த இருவர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
 

கிருஷ்ணகிரி அருகே உள்ள திட்டம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவரும் அவதானப்பட்டி பகுதியை சேர்ந்த சரண்யா என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெகன் இருசக்கர வாகனத்தில் தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது, அணைரோடு மேம்பாலம் பகுதியில் சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் ஜெகனை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் இருந்து அவரை கீழே தள்ளி தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ஜெகனை வெட்டினர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தங்களின் செல்போன்களில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் உலாவ விட்டனர். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து சங்கர் கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் தலைமறைவாக இருந்த உறவினர்கள் இரண்டு பேரை பிடிக்க இரண்டு தனி படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த நாகராஜ் மற்றும் முரளி ஆகியோர் சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
 

Video Top Stories