Asianet News TamilAsianet News Tamil

தேர்வில் தோல்வி அடைந்தால் வருத்தப்படக் கூடாது; 51 வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நம்பிக்கை பெண் பேட்டி

கரூரில், 51 வயது பெண்மணி ஒருவர் 34 ஆண்டுகளுக்கு பிறகு 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 3 பாடங்களுக்கு எழுதியிருந்தார். இதில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளார்.

கடந்த ஜூலை 3ம் தேதி நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த ஷாகிலாபானு (வயது 51) என்பவர் ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கான  தேர்வு எழுதி இருந்தார். இதில், தமிழ் 35, கணிதம் 35, அறிவியல் பாடத்தில் 48 என மொத்தம் 118 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே, ஆங்கிலம், சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று இருந்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக சத்துணவு கூடத்தில் சமையலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், சத்துணவு அமைப்பாளர் பதவி உயர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால், கடுமையாக முயற்சி செய்து படித்து 51 வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். படிப்புக்கு வயது தடையில்லை என நிரூபித்து காட்டியுள்ளார் இந்த பெண்மணி.

இதுகுறித்து ஷாகிலாபானு கூறுகையில்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பொழுது முதலில் தடுமாற்றமாகவும், கடினமாகவும் இருந்தது. என்னுடைய மகன் படிப்பதற்கு ஊக்கமளித்து அனைத்து பாடங்களையும் சொல்லிக் கொடுத்தார். அதனால் தான் நான் தேர்வில் வெற்றி பெற்றேன். முதல் தேர்வில் எழுதி தோல்வி அடைந்து விட்டீர்கள் என்று மாணவர்கள் மனம் வருந்தாமல் அடுத்த தேர்வில் எழுதி வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென கூறினார்.

Video Top Stories