Asianet News TamilAsianet News Tamil

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; திடீரென கோவில் கிணற்றில் குதித்த நபரால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர் திடீரென கோவில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே செண்பகத்தறை பகுதியைச் சேர்ந்தவர் கோபி. சென்னையில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் மனைவி, குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வரும் இவர் அவ்வப்போது விடுமுறைக்கு சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன்  வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை தனியாக சென்னையில் இருந்து சொந்த ஊரான செண்பகத்தறைக்கு வந்த இவர் மது குடித்துவிட்டு வந்து கோவில் கிணற்றினுள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் சத்தம் போட்டு கத்தவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். மேலும் கொல்லங்கோடு தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து தீ அணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடம் வருவதற்குள் ஊர்மக்கள் கயிறு மூலம் கிணற்றில் குதித்த கோபியை பத்திரமாக மீட்டனர். 

விசாரணையில் மனைவியிடம் தகராறு செய்துவிட்டு வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வந்த தீ அணைப்பு துறையினர் திறந்து கிடக்கும் கிணறை மூடி வைக்கும் படி அறிவுறுத்தி சென்றனர். இந்த சம்பவம் அந்த சிறிது நேரத்திற்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

Video Top Stories