Asianet News TamilAsianet News Tamil

பழனி முருகன் கோவிலில் பக்தர் மீது தாக்குதல்; நூற்றுக்கணக்கான பக்தர்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வந்த பக்தரை பாதுகாப்பு அதிகாரி தாக்கியதை கண்டித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோவிலில் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். அப்போது ஈரோடு பக்தர்கள் காவடி  எடுத்து  செல்ல  கோவில் நிர்வாகம் சிறப்பு வழி ஏற்பாடு செய்து இருந்தது. இதில் எடப்பாடி பக்தர்களும் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவில் பாதுகாவலர்கள், கோவில் அதிகாரிகள் எடப்பாடியைச் சேர்ந்த சந்திரன் என்பவரை இழுத்துக் கொண்டு சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதில் அந்த பக்தருக்கு மண்டை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சந்திரன் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் பழனி மலைக்கோவிலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் கோவில் வளாகத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து கோவில் உதவி ஆணைய லட்சுமி தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கோவில் அதிகாரி மற்றும் பாதுகாவலர்களை சஸ்பெண்ட் செய்வதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் பழனி மலைக்கோவிலில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

Video Top Stories