Asianet News TamilAsianet News Tamil

போலி வாரிசு சான்றிதழ் மூலம் சொத்தை அபகரிக்க முயற்சி? பதிவாளர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு

தருமபுரி மாவட்டத்தில் தனக்கு சொந்தமான சொத்துகளை போலி வாரிசு சான்றிதழ் மூலம் அபகரிக்க முயல்வதாக அரூர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பாக பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.

தருமபுரி மாவட்டம், அரூர் அப்துல் கலாம் நகரைச் சேர்ந்த திருவேங்கடம் மகள் மோனிகா என்கின்ற கவிபிரியா (வயது 32). இவருக்கு திருமணமாகி சுமார் ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவர் அரூர் அருகே உள்ள எருமியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர்கள் கலப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கவிபிரியா அவரது குழந்தையுடன்  தந்தை.திருவேங்கடம், அவரது தாய் சாந்தியுடன் குடியிருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் கவிபிரியாவுக்கு தெரியாமல் அவருக்கு உரிமையான நிலத்தை போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து சுத்த கிரையம் செய்வதாக தகவல் கிடைத்ததாக கூறப்பட்ட நிலையில், இதை தடுத்து நிறுத்துவதற்காக அரூர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கவிபிரியா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து தகவலறிந்த செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தை செய்தி சேகரித்து கொண்டிருக்கும் போது கவிபிரியாவின் தாய்மாமா தேவராஜ் அவரது தாய் சாந்தி, தந்தை திருவேங்கடம், ஆகியோர் கொண்ட கும்பல் செய்தியாளர்களை பொதுமக்கள் மத்தியில் தகாத வார்த்தைகளால் திட்டியும், அவதூறாக பேசியும் உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று தாக்குதல் நடத்த முற்பட்டனர். 

இது குறித்து அரூர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட பின்பு காவல் துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் விசாரணை செய்துகொண்டு இருக்கும்போது காவல் துறையினரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

Video Top Stories