Asianet News TamilAsianet News Tamil

பழனி முருகன்கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; அரோகரா கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்

பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 25ம் தேதி நடைபெற உள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை‌ 8.30 மணியளவில் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6ம் நாள் திருவிழாவான 24ம் தேதி மாலை நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு நான்கு ரதவீதிகளில் வெள்ளித் தேரோட்டமும், 25ம் தேதி முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது. 

முருகபெருமான் இன்று முதல் தினமும் தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வருகிற  28ம் தேதி இரவு தெப்பத்தேரும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைய உள்ளது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக பழனி திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Video Top Stories