Asianet News TamilAsianet News Tamil

பழனி கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற இஸ்லாமியர்களை ஆரத்தழுவி அழைத்துச் சென்ற இந்துகள்

பழனியில் விமரிசையாக நடைபெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற இஸ்லாமியர்களை பக்தர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த நெய்க்காரப்பட்டி கிராமத்தில் பழமையான ஹைகோர்ட் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள் இணைந்து பத்திரகாளியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான திருப்பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டனர். இதனை அடுத்து குடமுழுக்கு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 

இந்த நிலையில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள நெய்க்காரப்பட்டியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு கோயில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர். கோயில் குடமுழுக்கு விழா அழைப்பை ஏற்று இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சீர்வரிசை தட்டுகளுடன், கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். மேலும் திருப்பணிக்கு நன்கொடையும் வழங்கினர். 

இஸ்லாமியர்களை கோயிலுக்குள் கட்டியணைத்து வரவேற்று சீர்வரிசைகளை கோயில் நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் இஸ்லாமிய இளைஞர்கள் நடத்திவரும் காயிதே மில்லத் நற்பணி அமைப்பு சார்பில் கோயிலுக்கு மரத்திலான பீரோவை வாங்கி அன்பளிப்பாக வழங்கினர். கோயில் குடமுழுக்கு விழாவில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்து கொண்டாடினர். ஆண்டு தோறும் பத்திரகாளி அம்மன் கோவிலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி விழாவிலும் இஸ்லாமியர்கள் தங்களது பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories