Asianet News TamilAsianet News Tamil

திருச்செந்தூரில் கலைகட்டிய கந்தசஷ்டி தொடக்க விழா; அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு

கந்தசஷ்டி விழா இன்று தொடங்கிய நிலையில் திருச்செந்தூரில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை தொடங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கிவரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவில் ஒன்றான கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கந்த சஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதற்கான பல விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

முதல் நாளான இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை மண்டபத்திற்கு எழுந்தருளினார். யாகசாலை மண்டபத்தில் மூன்று பிரதான கும்பம் உட்பட 41 கும்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

யாகசாலை பூஜை தொடங்கியதும் பக்தர்கள் பச்சை ஆடை உடுத்தி தங்களது விரதத்தை தொடங்கினார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் கோவிலில் அங்கங்கே அமர்ந்து கந்த சஷ்டி கவசம் முருகனின் பாடல்களையும் பாடி விரதம் இருக்க தொடங்கினார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு 18 இடங்களில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து உச்சிகால அபிஷேகம் மாலை 3 மணிக்கு சாய் ரட்ச தீபாராதனை நடைபெறும். இன்று சூரிய கிரகணம் 5 மணி முதல் 6.15 மணி வரை இருப்பதால் மாலை 4 மணிக்கு சாமிகளுக்கு பட்டு சாத்தப்பட்டு நடை சாத்தப்படும். அதன் பின்னர் 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. கந்த சஷ்டி விழாவின் சிகர  நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஆறாம் திருநாளானான வரும் 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு மேல்  திருச்செந்தூர் கோவில் கடற்கரையில்    நடைபெறஉள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

Video Top Stories