
திமுக கூட்டணியில் விரிசல் இல்லை.! வதந்திகளுக்கு விசிக தலைவர் முற்றுப்புள்ளி.!
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர் அறிவிப்பு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தார். கூட்டணித் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களே முறைப்படி வேட்பாளர்களை அறிவித்தார் என்றும், இதில் எந்தவித குழப்பமும் இல்லை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். விசிக வேட்பாளர்கள் கடலூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடுவதை உறுதி செய்த அவர், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்துப் பேசுகையில், அத்தகைய கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தக் கணக்கெடுப்பு வெறும் எஸ்சி (SC) மற்றும் எஸ்டி (ST) பிரிவினருக்கு மட்டும் இன்றி, அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய சட்டப்பூர்வமான மக்கள் தொகை கணக்கெடுப்பாக அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.