
அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு... தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து திமுகவினர் போராட்டம்!
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொகுதி மறுவரையறை மசோதாவின் நகல்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மத்தியில் ஒரு குறிப்பிட்ட தரப்பு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றால், அவர்கள் தங்களுக்குச் சாதகமாக அரசியலமைப்பில் திருத்தங்களை எளிதாக மேற்கொண்டு, இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பைச் சிதைத்து ஒரு குறிப்பிட்ட மதச் சார்பு அரசியலைத் திணிக்க முயல்வார்கள் என்று எச்சரித்தார்.