
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .பங்குனி பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை பல்லக்கில் கொடிபட்டம் வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது . முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோயில் குடைவரைக் கோயிலாகும். இக்கோயிலில் 15 நாட்கள் நடைபெறும் பங்குனித் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். அதனையொட்டி முதல்நாளான இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தெய்வானை சமேதமாய் சுப்பிரமணிய சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். இவர்களது முன்னிலையில் காலை 8.35 மணியளவில் கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. பின்பு கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.