கிருஷ்ணகிரி கல்லூரி மாணவர்கள் பாதிப்பு- நடந்த்து என்ன.? ஆர் ஆர் பிரியாணி ஓனர் விளக்கம்

Share this Video

கிருஷ்ணகிரியில் ஆர்.ஆர். பிரியாணி நிறுவனத்தால் நடத்தப்பட்ட கேட்டரிங் கல்லூரி மூடப்பட்டது மற்றும் மாணவர்களின் சான்றிதழ்கள் வழங்கப்படாதது குறித்த செய்திக்கு, அதன் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் தனது வீடியோ பதிவில், "கிருஷ்ணகிரியில் கல்லூரி தொடங்குவதில் எனக்குத் தொடக்கத்திலிருந்தே உடன்பாடு இல்லை. அது எனது நேரடிப் பார்வையில் இல்லாமல், எனது நண்பர்கள் மற்றும் கல்லூரி உரிமையாளர் மூர்த்தி ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ்தான் செயல்பட்டது. கல்லூரியைச் சென்னைக்கு மாற்றும் முயற்சியில் நான் இருந்ததால், அங்கு நடந்த தவறுகள் எனது கவனத்திற்கு வரவில்லை. ஊடகம் வழியாகவே இந்த விவகாரத்தை நான் அறிந்துகொண்டேன்," என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மாணவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகத் தான் எங்கும் வாக்குறுதி அளிக்கவில்லை என்றும், தனது நிறுவனத்தின் ஆள் பற்றாக்குறையைப் போக்கவும், உள்ளூரிலேயே மாணவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வழங்கவுமே இந்தக் கல்லூரியைத் தொடங்கியதாக விளக்கமளித்தார். இருப்பினும், அங்கு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்குத் தான் முழுப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்த தமிழ்ச்செல்வன், பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் எவ்விதப் பிரச்சினையும் இன்றி அவர்களின் அசல் சான்றிதழ்களைத் தனது சொந்தப் பொறுப்பில் மீட்டுத் தருவதாக உறுதியளித்துள்ளார். தன்னை விமர்சிப்பவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும், மாணவர்களின் நலனே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Video