
உதகையில் ஆலங்கட்டியுடன் கொட்டி தீர்த்த கனமழை..! பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
மலை மாவட்டம் ஆன நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், காலை நேரங்கள் உறை பனிப்பொழிவு மற்றும் நீர் பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டதால் காலை நேரங்களில் தோட்டங்களில் பணிபுரிபவர்களும், பணிகளுக்கு செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வந்தததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை சாரல் மழை பெய்த நிலையில், இன்று காலை முதல் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மதியம் முதல் திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக சேரிங்கிராஸ், அரசு தாவரவியல் பூங்கா, பிங்கர் போஸ்ட், காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை பெய்ததால் வாகனங்கள் மீதும், புல்வெளிகள் மீதும் வெள்ளை கற்கள் வீசியது போல் ஆலங்கட்டிகள் விழுந்திருந்தது கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது.தற்போது பெய்த கனமழையின் காரணமாக மலைத் தோட்ட காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.