
கோவை
இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. சவுதி அரேபியாவில் பிறை தெரிந்த பிறகு ஜாக் அமைப்பினர் இந்த ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அதன்படி சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள ஜாக் அமைப்பினர் புத்தாடைகள் அணிந்து ரம்ஜான் சிறப்பு தொழுகைகளை மேற்கொண்டனர். தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் உள்ள ஜாக் அமைப்பினர் ரம்ஜான் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா மஹாலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டனர். இங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு தொழுகை நடைபெற்றது. சரியாக ஏழு மணிக்கு தொழுகை துவங்கியது. தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இல்லங்களுக்கு செல்லும் அவர்கள் உற்றார் உறவினர்களுடன் உணவுகளை பரிமாறி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.