ADMK vs DMK

Share this Video

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்து, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ஜெயக்குமார், திமுகவின் குடும்ப அரசியலையும், ஊழலையும் கடுமையாக விமர்சித்தார். "கோபாலபுரத்து கோமான்கள் வீட்டில் பணம் குவிகிறது, ஆனால் மக்கள் வீதிகளில் பாதுகாப்பற்று கிடக்கிறார்கள்" என்று அவர் சாடினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது பெயரளவில் கூட இல்லை என்றும், காவல்துறை தனது சுதந்திரத்தை இழந்து ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, போதைப்பொருள் புழக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சீரழித்து வருவதாகவும், இதற்கு திமுக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன. தன்னுடைய பேச்சின் உச்சகட்டமாக ஜெயக்குமார் கூறுகையில், "தமிழக வரலாற்றில் திமுக எப்போதும் இரண்டாவது முறை தொடர்ந்து ஆட்சி அமைத்தது கிடையாது. அந்தச் சரித்திரம் இந்த முறையும் தொடரும். 2026-ல் அதிமுக மட்டுமே ஆட்சி அமைக்கும் கட்சி. திமுகவின் இந்த 'விடியா அரசு' வீட்டுக்கு அனுப்பப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை" என்று சவால் விடுத்தார். தூத்துக்குடி விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு உள்ளிட்ட சமீபத்திய வன்முறைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகம் மாறிவிட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பிய முழக்கங்களால் சென்னை மாநகரமே அதிர்ந்தது.

Related Video