Asianet News TamilAsianet News Tamil

விஜயவாடாவில் பயங்கரம்; பிரேக் பிடிக்காத பேருந்து பிளாட்பாரத்தின் மீது ஏறியதில் மூவர் பலி!!

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பிரேக் திடீரென செயலிழந்து அங்கு நின்றவர்கள் மீது மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா பேருந்து நிலையத்திலிருந்து குண்டூர் செல்வதற்காக பயணிகளுடன் அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று காத்திருந்தது. விஜயவாடா பேருந்து நிலையத்தில் டிரைவர் பேருந்தை ஸ்டார்ட் செய்தபோது பிரேக் பிடிக்கவில்லை. இதனால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னோக்கி சென்று பிளாட்பாரம் மீது ஏறியது. அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள், நடத்துனர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. 

விபத்தில் அதே பேருந்தின் நடத்துனர், ஒரு குழந்தை, ஒரு பெண் என மூவர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விபத்தில் உயிரிழந்த மூவரின் உடல்களும் விஜயவாடா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

Video Top Stories