வேலைக்காரங்கனு பார்க்க மாட்டார்! சில்க் ஸ்மிதா பற்றி ரம்யா கிருஷ்ணன் கணவர் வம்ஷி கூறிய நெகிழ்ச்சி சம்பவம்!
பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் வம்ஷி, நடிகை சில்க் ஸ்மிதா குறித்து... அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திராவிட நிறம், மயக்கும் கண்கள், பட்டு போன்ற மேனி என பெண்களே பொறாமை கொள்ளும் அழகில் தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கியவர் தான் சில்க் ஸ்மிதா.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர்... சினிமாவில் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கியவர். இவரை திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமை, பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தியை தான் சேரும். 'வண்டிச்சக்கரம்' என்ற திரைப்படத்தில் சில்க் என்ற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்தார்.
அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்து விட... அதனுடன் ஸ்மிதா என்பதையும் இணைத்து, சில்க் ஸ்மிதா என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில், சுமார் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான சில்க், சில திரைப்படங்களை தயாரித்து அதில் மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்தித்தார்.
80 மற்றும் 90-க்கு இடைப்பட்ட காலங்களில், இவருடைய டான்ஸ் இருந்தால், அந்த படம் ஹிட் என கூறப்பட்டது. அதனால் ஹீரோ கால்ஷீட் கேட்பதற்கு முன்பு இவரின் கால்ஷீட் கேட்டு வரிசையில் நின்ற தயாரிப்பாளர்கள் பலர் உள்ளனர். திரையில் மிகவும் போல்டான பெண்ணாக இவர் பார்க்கப்பட்டாலும், நிஜத்தில் ரொம்ப சாப்ட். அதே போல் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். இதனை அவரது திரையுலக நண்பர்கள் பலர் பல பேட்டிகளில் கூறியுள்ளனர்.
ஒருகட்டத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் இருந்து வெளியேறி... கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக தன்னை நிரூபிக்க தொடங்கிய சில்க் ஸ்மிதா, 1996-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டது, இப்போது வரை பல ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. மேலும் இவர் தற்கொலைக்கான பின்னணி என்ன என்பதன் மர்மமும் தொடர்ந்து நீடித்துக் கொண்டு தான் உள்ளது.
இவருக்கு பின்னர் பல கவர்ச்சி நடிகைகள் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருந்தாலும், இவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதே உண்மை. இந்நிலையில் பிரபல இயக்குனரும், ரம்யா கிருஷ்ணனின் கணவருமான வம்ஷி, சில்க் ஸ்மிதா குறித்து நெகிழ்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
துணை இயக்குனராக பல முன்னணி தெலுங்கு இயக்குனர்களிடம் பணியாற்றி, பின்னரே இயக்குனராக மாறியவர் வம்சி. அப்போது நடிகை சில்க் ஸ்மிதா நடித்த படங்களிலும் பணியாற்றி இவர், சில்க் தயாரித்த படங்களிலும் சில மாதங்கள் பணியாற்றியதாக கூறியுள்ளார். அப்போது சில்க் நீங்க ரொம்ப நல்ல வேலை செய்றீங்க என பாராட்டி உள்ளாராம். பின்னர் இவருக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவே சில்க் ஸ்மிதா தயாரித்த படத்தில் இருந்து விலகி உள்ளார்.
தெலுங்கில் இவர் இயக்கிய படம் வெளியான பின்னர், ஒரு நாள் ரோட்டில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது இவரைக் கடந்து ஒரு கார் சென்றுள்ளது. பின்னர் அந்தக் கார் அப்படியே பின்னால் வந்து இவர் முன்பு நின்றதாம். அதில் இருந்து சில்க் கார் கண்ணாடியை இறக்கி, எப்படி இருக்கீங்க வம்சி என்னை ஞாபகம் இருக்கா எனக் கேட்டுள்ளார்.
உடனே வம்சி உங்களை எப்படி மேடம் மறக்க முடியும் எனக் கூறியுள்ளார். உங்கள் படம் பார்த்தேன் நல்லா இருந்துச்சி எனக் கூறி விட்டு சென்றாராம். சில்க் ஸ்மிதாவின் அந்த செயல் தன்னை ஆச்சர்யப்படுத்தியதாக கூறியுள்ள வம்சி, சில்க் ஸ்மிதா எப்போதும் வீட்டில் வேலை செய்றவங்க, கார் டிரைவர் என யாரையும் பிரிந்து பார்க்க மாட்டார். அனைவரையும் தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக தான் பார்ப்பார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.