ரீ-ரிலீசுக்கு தயாராகும் பருத்திவீரன்... அடுத்த பஞ்சாயத்துக்கு ரெடியாகும் அமீர் கேங்?
அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடித்த பருத்திவீரன் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால் அப்பட பஞ்சாயத்து மீண்டும் பூதாகரகாம வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மதுரை மண் சார்ந்து எடுக்கப்பட்ட படங்களில் முன்னிலையில் இருக்கும் படம் என்றால் அது பருத்திவீரன் தான் என சொல்லும் அளவுக்கு ஒரு மாஸ்டர் பீஸ் படமாக அமைந்துள்ளது. அமீர் இயக்கிய இப்படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். மேலும் நடிகை பிரியாமணிக்கு இப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இப்படத்திற்காக யுவன் இசையமைத்த பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.
இப்படி பருத்திவீரன் படத்திற்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், அப்படத்தின் பஞ்சாயத்து இன்னும் ஓய்ந்தபாடில்லை. அப்படத்தை இயக்கிய இயக்குனர் அமீருக்கும், அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே பட ஷூட்டிங் சமயத்தில் தொடங்கிய பனிப்போர் 17 ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. கடந்த ஆண்டு இருதரப்புக்கும் இடையே நடந்த மோதல் சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது.
இதையும் படியுங்கள்... இமான் - எஸ்.கே. மோதல் முதல் பருத்திவீரன் பஞ்சாயத்து வரை... 2023ல் கோலிவுட் சந்தித்த சர்ச்சைகள் ஒரு பார்வை
paruthiveeran
குறிப்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் அமீரை திருடன் என விமர்சித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து கொந்தளித்த அமீரின் சகோதரர்களான சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் ஞானவேல் ராஜாவை லெஃப்ட் ரைட் வாங்கினர். பின்னர் அமீரும் தன் பங்கிற்கு அறிக்கை வெளியிட்டு நடந்ததை வெளிச்சம் போட்டு காட்டினார். இதனால் ஞானவேல் ராஜா கப்சிப் ஆனார்.
paruthiveeran
அப்படியே பருத்திவீரன் பஞ்சாயத்து அமைதியான நிலையில், தற்போது அது மீண்டும் பூகம்பமாய் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஏனெனில் பருத்திவீரன் படத்தை வருகிற பிப்ரவரி மாதம் ரீ-ரிலீஸ் செய்யும் வேலைகளில் ஞானவேல் ராஜா இறங்கி உள்ளாராம். அப்படி ரீ-ரிலீஸ் செய்தால் அதில் கிடைக்கும் வருமானம் அனைத்தும் அவருக்கு தான் செல்லும். தங்களுக்கு பணம் கொடுக்காமல் பருத்திவீரன் படத்தை ரீ-ரிலீஸ் செய்து ஞானவேல் ராஜா லாபம் பார்க்க அமீரும் அவரது ஆதரவாளர்களும் விடமாட்டார்கள் என்பதால் இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் பருத்திவீரன் பஞ்சாயத்து ஆரம்பமாகும் என கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... மாபெரும் வெற்றி இயக்குனர்.. ஆனால் தயாரிப்பாளராக பெரும் நஷ்டம் - அமீரை கடனாளியாக்கிய 3 முக்கிய படங்கள்!