இந்திய பவுலிங்கை திறமையாக ஆடும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்!! திணறும் இந்திய பவுலர்கள்.. இங்கிலாந்து நிதான ஆட்டம்
அலெஸ்டர் குக்கின் விக்கெட்டை இழந்தாலும் அதன்பிறகு ரூட் - ஜென்னிங்ஸ் ஜோடி நிதானமாக ஆடிவருகிறது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்களாக குக் மற்றும் ஜென்னிங்ஸ் களமிறங்கினர். இருவரும் நிதானமாக தொடங்கினார். உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரின் வேகப்பந்து வீச்சை சமாளித்து ஆடிய குக், அஷ்வினின் சுழலில் 13 ரன்களில் வெளியேறினார்.
9வது ஓவரில் குக் அவுட்டானார். அதன்பிறகு தொடக்க வீரர் ஜென்னிங்ஸுடன் அந்த அணியின் கேப்டன் ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியின் பவுலிங்கை சாமர்த்தியமாக ஆடுவதோடு, ரன்களையும் குவித்து வருகிறது. இரண்டாவது விக்கெட்டை எடுக்க இந்திய அணி திணறிவருகிறது.
இங்கிலாந்து அணி, 28 ஓவருக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ரூட்டும் ஜென்னிங்ஸும் தெளிவாக ஆடிவருகின்றனர். ரூட் 31 ரன்களுடனும் ஜென்னிங்ஸ் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்கள் சமாளித்து ஆடுகின்றனர். ஸ்பின் பவுலிங் எடுபடுகிறது. எனவே குல்தீப் யாதவை ஆடும் லெவனில் எடுத்திருந்தால் இங்கிலாந்து அணிக்கு அஷ்வினும் குல்தீப்பும் இணைந்து அழுத்தம் கொடுத்திருக்கக்கூடும்.