Meta Child safety: சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை இந்திய சைபர் கிரைம் இணையதளத்தில் ( Cyber Crime Portal) நேரடியாக தெரிவிக்க மெட்டா (Meta)நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
குழந்தைகள் தொடர்பான புகார்கள்
சமூக வலைதளங்களில் ஒரு பதிவு சில நொடிகளில் உலகம் முழுவதும் பரவும் நிலையில், சமீப காலங்களில் குழந்தைகள் தொடர்பான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகப் பதிவுகள் பரவுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, Instagram உள்ளிட்ட Meta தளங்களில் குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் வகையிலான பதிவுகள் இடம்பெறுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
Meta-க்கு மத்திய அரசு நோட்டீஸ்
இதுபோன்ற சட்டவிரோத உள்ளடக்கங்களைத் தடுக்கவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு சார்பிலும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புகார்கள் தொடர்பாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), Meta நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
சைபர் கிரைம் போர்ட்டலுக்கு Meta நேரடியாக தகவல்
இதையடுத்து, Facebook, Instagram, WhatsApp உள்ளிட்ட தளங்களில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் சட்டவிரோத பதிவுகள் குறித்து இந்திய Cyber Crime Portal-க்கு நேரடியாக தகவல் தெரிவிக்க Meta ஒப்புக்கொண்டுள்ளது. இந்த Cyber Crime Portal, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Indian Cyber Crime Coordination Centre (I4C) மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
இதற்கு முன்பு, Meta குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை அமெரிக்காவைச் சேர்ந்த National Center for Missing & Exploited Children (NCMEC) அமைப்பிடம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் யாருக்கு என்ன பலன்?
குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தை விரைவாகக் கண்டறிந்து, அது தொடர்பான தகவல்களை சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் கொண்டு செல்ல இந்த நடவடிக்கை உதவும்.
இந்திய சைபர் கிரைம் போர்ட்டலில் ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களைப் புகாரளிக்க தனிப்பிரிவு உள்ளது. இதில், புகார் அளிப்பவரின் அடையாளத்தை தெரிவிக்காமல் புகார் செய்யும் வசதியும் உள்ளது. மேலும், பதிவு செய்த புகாரின் நிலை என்ன என்பதை ஆன்லைனிலேயே தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும்.
இதன் மூலம் தேவையான தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் இந்திய விசாரணை அமைப்புகளுக்கு நேரடியாகச் செல்வதால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இந்திய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் என்ன செய்யலாம்?
குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக அல்லது சட்டவிரோத ஆன்லைன் உள்ளடக்கம் குறித்து தகவல் கிடைத்தால், இந்திய அரசின் National Cyber Crime Reporting Portal மூலம் புகார் அளிக்கலாம்.


