முறைகேடாக பணம் மாற்றிய 4 வங்கி அதிகாரிகள் சஸ்பென்ட்
புதுச்சேரியில் அரசு கூட்டுறவு வங்கியில் முறைகேடாக செல்லாத பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிய 4 வங்கி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அறிவித்ததையடுத்து, பலர் வரி கட்டாமல் பதுக்கி வைத்திருந்த பணத்தை சட்டவிரோதமாக வங்கிகளில் மாற்ற முயற்சி மேற்கொள்ளும் சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரியில் லாஸ்பெட்டை கூட்டுறவு வங்கி கிளையில், பணிபுரியும் உதவி மேலாளர் குப்புசாமி மற்றும் காசாளர் ரவி ஆகியோர் 3 லட்சம் ரூபாய் பழைய நோட்டுக்களை முறைகேடாக மாற்றியுள்ளனர். இதையடுத்து, வங்கித் தணிக்கையின் போது பணம்மாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு இரு வங்கி அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.
இதேபோல் புதுச்சேரி மாநிலத்தின் மாஹே பகுதியில் கூட்டுறவு வங்கிக் கிளையில் பணிபுரியும் காசாளர் சந்தோஷ்குமார் என்பவர் இரண்டரை லட்சம் ரூபாய் செல்லாத நோட்டுகளை முறைகேடாக மாற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத மேலாளர் ஷியாமலா மற்றும் காசாளர் சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.