விவசாயம் செய்வது முதல் மான் வேட்டை வரை... அமெரிக்காவில் நெப்போலியனின் 300 ஏக்கர் தோட்டத்தில் இவ்வளவு வசதிகளா!
அமெரிக்காவில் உள்ள நடிகர் நெப்போலியனுக்கு சொந்தமான 300 ஏக்கர் விவசாய தோட்டத்துக்கு பிரபல யூடியூபர் முகமது இர்பான் சென்று அங்குள்ள வசதிகளை பற்றி கூறி இருக்கிறார்.
Nepoleon Farm in America
1990-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். புது நெல்லு புது நாத்து படம் மூலம் அறிமுகமான இவர், எஜமான், எட்டுப்பட்டி ராசா, கிழக்கு சீமையிலே என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகி அங்கு ஐடி கம்பெனி ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகிறார். அதன்மூலம் கோடி கோடியாய் சம்பாதித்து வரும் நெப்போலியன் அங்கு சொத்துக்களையும் வாங்கி குவித்து வைத்துள்ளார்.
பிரபல யூடியூபரான இர்பான் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றபோது அங்கு நெப்போலியனின் வீட்டை பற்றியும் அங்குள்ள வசதிகளை பற்றியும் வீடியோ வெளியிட்டு இருந்தார். அரண்மனை போல உள்ள அந்த வீட்டில் தியேட்டர், நீச்சல் குளம், ஜிம், பார் என சகல வசதிகளும் இருந்ததை பார்த்து அனைவரும் வாயடைத்துப் போயினர். இந்த நிலையில், அண்மையில் நெப்போலியனின் 60-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த இர்பான், அவரின் 300 ஏக்கர் விவசாய நிலத்தையும் வீடியோ எடுத்துள்ளார்.
300 ஏக்கர்
அந்த வீடியோவில் நெப்போலியனே தன் தோட்டத்தில் என்னென்ன வசதிகள் உள்ளது என்பது பற்றி விவரித்துள்ளார். நெப்போலியன் இந்த நிலத்தை 3 ஆண்டுகளுக்கு முன்னர் தான் சொந்தமாக வாங்கினாராம். இந்த இடத்தை பார்க்க சென்றபோது இதன் உரிமையாளர் அங்குள்ள தோட்டத்து வீடு 1963-ம் ஆண்டு கட்டியதாக கூறினாராம். அதைக்கேட்டதும் உடனே இந்த இடத்தை வாங்கிவிட வேண்டும் என முடிவெடுத்துவிட்டாராம் நெப்போலியன். ஏனெனில் அவர் பிறந்ததும் 1963-ம் ஆண்டு தானாம். அதனால் செண்டிமெண்டாக இந்த இடத்தை வாங்க முடிவெடுத்ததாக நெப்போலியன் கூறினார். 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த விவசாய நிலத்தில் சகல வசதிகளும் உள்ளன.
பார்ட்டி ஹால்
இந்த தோட்டத்திலேயே தனியாக ஒரு பார்ட்டி ஹாலும் இருக்கிறது. அங்கு தன்னுடைய பேமிலி கெட் டூகெதர், பிரெண்ட்ஸ் மீட்டிங் உள்ளிட்டவற்றை நடத்திக்கொள்வேன் என நெப்போலியன் கூறி உள்ளார். மேலும் அண்மையில் கூட தன்னுடைய கல்லூரி நண்பர்களின் ரீ-யூனியனை அங்கு நடத்தியதாக நெப்போலியன் கூறினார்.
250 மாடுகள்
நெப்போலியன் தன்னுடைய தோட்டத்தில் 250 மாடுகளை வளர்த்து வருகிறார். அந்த மாடுகளை பராமரிக்க சில ஊழியர்களையும் பணியமர்த்தி இருக்கிறார். அந்த மாடுகளுக்கு தீனி போட்டு நன்கு வளர்ந்த பின்னர் அதனை சந்தையில் இறைச்சிக்காக விற்பனை செய்து அதன்மூலம் சம்பாதித்து வருகிறார்.
செயற்கை குளம்
தன் விவசாய நிலங்களுக்கு தேவையான நீரை சேகரித்துக் கொள்ள செயற்கையாக குளம் ஒன்றையும் அமைத்து வைத்திருக்கிறார். அந்த குளங்கள் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதுமாதிரி மேலும் இரண்டு குளங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக நெப்போலியன் கூறினார்.
6 மாதம் விவசாயம்
அமெரிக்காவில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தான் காய்கறிகளை விளைவிக்க முடியுமாம். அதன்பின்னர் ஆறு மாதங்கள் குளிர்காலமாக இருக்கும் என்பதால் அந்த காலகட்டத்தில் விவசாயம் செய்ய மாட்டாராம். விவசாயம் செய்யும் 6 மாதங்களில் அனைத்து வகையான காய்கறிகளையும் விளைவிப்பாராம். அந்த காய்கறிகளை அறுவடை செய்து விற்பனை செய்யாமல் தன் வீட்டுக்கும், தன் நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு கொடுத்துவிடுவாராம்.
3 பெட்ரூமுடன் வீடு
நடிகர் நெப்போலியனின் பண்ணையில் வீடும் உள்ளது. 3 பெட்ரூம் வசதியுடன் கூடிய அந்த வீட்டிலும் சகல வசதிகளும் உள்ளன. குடும்பத்தினருடன் வந்து ஓய்வெடுக்க இந்த வீட்டை பயன்படுத்துவாராம் நெப்போலியன். இந்த வீட்டின் பின் புறம் நீச்சல் குளமும் உள்ளது. அதோடு அங்கு தந்தூரி செய்ய பிரத்யே அடுப்புகளும் அந்த வீட்டில் உள்ளன.
16 லட்சத்துக்கு டைனிங் டேபிள்
நெப்போலியன் இந்த தோட்டத்தை வாங்கிய போது அங்குள்ள வீட்டில் இருந்த டைனிங் டேபிள் அவருக்கு மிகவும் பிடித்துப்போனதாம். ஒரே மரத்தில் செய்யப்பட்ட மிகவும் அழகான டைனிங் டேபிளை அதன் உரிமையாளர் தர மறுத்தாராம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை எனக்கூறி ரூ.16 லட்சம் கொடுத்து அந்த டைனிங் டேபிளை வாங்கினாராம் நெப்போலியன்.
மான் வேட்டை
நெப்போலியனின் பண்ணையில் ஒரு பகுதி காட்டுப்பகுதியாக உள்ளது. அங்கு மான் வேட்டையும் நடத்த அனுமதி உண்டாம். அமெரிக்காவில் மான்களின் எண்ணிக்கை அதிகமானதால் அவை சாலைகளில் உலா வந்து விபத்தில் சிக்கி வருவதை தடுக்க அங்குள்ள அரசாங்கமே குறிப்பிட்ட சில மாதங்கள் மான் வேட்டை ஆடிக்கொள்ள அனுமதி அளிக்குமாம். அந்த சமயத்தில் நெப்போலியனின் காட்டில் மான்வேட்டை செய்துகொள்வார்களாம்.
இதையும் படியுங்கள்... படகுகளுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் விடிய விடிய மீட்புபணி... மாமன்னன் மாரி செல்வராஜுக்கு குவியும் பாராட்டு