Shivaraj Kumar: மனைவியுடன் வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்!
நடிகர் விஜயகாந்தின் மறைவை தொடர்ந்து, இன்று கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் மூத்த நடிகர் கார்த்தியின் மகனும், நடிகருமான கெளதம் கார்த்திக் ஆகியோர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் ஆக்ஷன் அதிரடி மன்னனாக பார்க்கப்பட்டவர் கேப்டன் விஜயகாந்த். ஒரு கட்டத்தில் ரஜினி, கமல்ஹாசனுக்கு சமமாக சம்பளம் பெரும் நடிகராக இருந்தார். தீவிர அரசியலில் ஈடுபட்டதால், தேமுதிக என்கிற கட்சியை துவங்கி, சட்டமன்ற தேர்தலை அதிமுக கூட்டணியுடன் சந்தித்தார். இதன் பலனாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றது மட்டும் இன்றி, அவர் கட்சி சார்பில் தேர்தலை சந்தித்தவர்களும் மிகப்பெரிய வெற்றியை கண்டனர்.
பின்னர் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக... அதிமுகவில் இருந்து பிரிந்து, எதிர்க்கட்சி தலைவராக மாறினார். வெற்றிகரமான அரசியல்வாதியாக இருந்த விஜயகாந்துக்கு முதுகு தண்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை.. ஓரேயடியாக அவரது அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணவைத்தது.
கடந்த 8 வருடமாக வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில்.. அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டது. டிசம்பர் 27-ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், 28-ஆம் தேதி காலை 6:10 மணிக்கு உயிரிழந்தார். இவரது மறைவு, ஒட்டு மொத்த திரையுலகினரையும், அரசியல் கட்சியினரையும், ரசிகர்களையும் சோகத்தில் மூழ்கடித்தது.
லட்சக்கணக்கான ரசிகர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து, விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில்... ஏராளமானோர் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டனர். மேலும் விஜயகாந்த் இறந்த போது, நேரில் வந்து அஞ்சலி செலுத்தமுடியாத ரசிகர்களும்... பிரபலங்களும் அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்கிறார்கள்.
அந்த வகையில் இன்று சூர்யா, கார்த்தி, சிவகுமார், சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வந்திருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இவர்களை தொடர்ந்து நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தன்னுடைய மனைவியுடன் வந்து விஜயகாந்தின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று... கேப்டன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.