Aadujeevitham :ஆடுஜீவிதம் படத்தின் இயக்குனர் பிளெஸ்ஸி தமிழ் படத்தில் நடித்துள்ளார்.. எந்த படம் தெரியுமா?
ஆடுஜீவிதம் படத்தின் இயக்குனர் பிளெஸ்ஸி ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்று உங்களுக்கு தெரியுமா?
பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஆடு ஜீவிதம். பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் அமலா பால், ஜிம்மி ஜீன், கே.ஆர். கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் உழைப்புக்கு பின் கடந்த 29-ம் தேதி வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்ச்ககர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த படம் வெளியாகி 4 நாட்களில் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
கேரளாவை சேர்ந்த நஜீப் என்பவர் வேலைக்காக அரபு நாட்டுக்கு செல்லும் நிலையில், அங்கு பாலைவனத்தில் ஆடுகளுடன் வாழ நேரிடுகிறது. அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போராட்டங்கள் அதிலிருந்து தப்பி நஜீப் மீண்டும் நாடு திரும்பினார் என்பதே படத்தின் கதை.
பிருத்விராஜின் நடிப்பும் அவரின் கடின உழைப்பும் பாராட்டப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 30 கிலோ வரை உடல் எடையை குறைத்த பிருத்விராஜ் தனது அசாதாரண நடிப்பின் மூலம் நஜீப்பாகவே வாழ்ந்திருக்கிறார் என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர் ரஹ்மானின் இசை இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் ஆடுஜீவிதம் படத்தின் இயக்குனர் பிளெஸ்ஸி ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்று உங்களுக்கு தெரியுமா? அது சசிகுமார் இயக்கத்தில் வெளியான ஈசன் படம் தான். இதுகுறித்து சசிகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரின் பதிவில் “ சுப்ரமணியபுரம் மலையாளத் திரைக்கதை வெளியீட்டு விழாவில் கிடைத்தது அவருடைய நட்பு. திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் எனது ஈசன் திரைப்படத்தில் நட்புக்காக நடித்துக் கொடுத்தார். அப்பொழுதிருந்தே ஆடு ஜீவிதத்தின் கதையை மனதில் சுமந்து கொண்டிருந்தார். பெரும்பாரமென அக்கதை அவரது இதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதை அவர் பேச்சில் உணரமுடிந்தது. இத்தனை வருடம் கழித்து தனது பாரத்தை நமது இதயத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்.
திரைப்படத்தின் ஒற்றை வரியாக பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற குரல் எனக்குள் ஒலிப்பதைப் போல இருந்தது. பிருத்விராஜ் அக்குரலைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். மனதையும் உடலையும் ஒப்புக் கொடுத்திருக்கிறார். பின்னணியில் முன்னணியாக ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்தியிருப்பது மாபெரும் பேரிசை. எவரும் மறக்க முடியாத மறுக்க முடியாத பெருவெள்ளம்.. பிளெஸ்சி சாருக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். கோட் லைப் நமது காலத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவம்” என்று குறிப்பிட்டுள்ளார்.